Friday, 15 May 2020

திருக்குறள்

குறள் பால்: பொருட்பால்.
குறள் இயல்: அரசியல்.
அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்.

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்.

விளக்கம்:-

நெருங்கிப் புத்தி சொல்லும் பெரியார்களைத் துணையாகக் கொள்ளாத காவலற்ற அரசன், பகையாய்க் கெடுப்பவர்கள் இல்லாவிட்டாலும் தானே கெடுவான்.


Wednesday, 13 May 2020

நான்காம் திருமுறை

பாடல் எண் : 4

குனித்த புருவமுங் கொவ்வைச்செவ் வாயிற் குமிண்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போன் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய வெடுத்தபொற் பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேயிந்த மாநிலத்தே.

பொழிப்புரை :

வளைந்த புருவங்களையும் , கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயிலே முகிழ்க்கும் புன்னகையையும் , கங்கையால் ஈரமான சடைமுடியையும் , பவளம் போன்ற சிவந்த திருமேனியில் அணிந்த பால் போன்று வெண்மையான வெண்ணீற்றுப் பூச்சினையும் , பேரின்பம் நல்கும் தூக்கிய திருவடிகளையும் காணும் வாய்ப்பினைப் பெறுவதாம்பட்சத்தில் இவ்வுலகில் மனிதராய்ப் பிறப்பெடுத்தலும் விரும்பத்தக்க செயலாகும் .

குறிப்புரை :

குனித்த - வளைத்த . கொவ்வைச் செவ்வாய் - கோவைப் பழம் போலுஞ் செய்ய திருவாய் . குமிழ் சிரிப்பு - புன்னகை . ` வளர்குமிழ் மலரும் ` ( கோயிற் புராணம் நடராசச் . 14) என்றதால் , மலரது முன்னிலையான அரும்பைக் குமிழ் எனல் புலப்படும் . படவே , அரும்பும் நகையைக் குமிழ் சிரிப்பு என்பர் . ` குமிண் சிரிப்பு ` என்றதிற் குமிண் என்றது முதனிலையாதல் வேண்டும் . அவ்வாறொன்று தமிழில் வேறெங்கும் காணப்படவில்லை . ` முறுவலிப்பு ` ( தி .4 ப .81 பா .7). பனித்த சடை - கங்கை நீராற் குளிர்ந்த சடை . ` பவளம் போல் மேனி : ( தி .4 ப .112 பா .1) ` பேரொளிப்பவள வெற்பென ... ... வீற்றிருந்த வள்ளலார் ( தி .12 பெரிய . அப்பர் . 379) பால்வெள் நீறு - பால் போலுந்திரு வெண்ணீறு :- ` செய்ய திருமேனி வெண்ணீறாடி ` ( தி .6 ப .9 பா .7) இனித்தம் - இனிதாந்தன்மை . இனிது அம் . பேரின்பம் தரும் தூக்கிய திருவடி , ` வ + தனம் ` . வகாரமாகிய சென்றடையாத திரு ( துறைசையமகவந்தாதி 100). காணப்பெற்றால் :- பெற லரி தென்றது . மனித்தப்பிறவி . ` மனித்தனாகிய பூழியன் ` ( தடாதகை . திருவவ . 64) ` மனித்தருக்கரசு ` ( ? திருமணப் , 199) எனப் பரஞ்சோதி முனிவர் வாக்கிற் பயின்றுளது இச்சொல் . ` பொல்லா மனித்தர் ` என்றாருமுளர் . மன்றாடுந் திருக்காட்சி கிடைக்கப்பெறின் , வேண்டா என வெறுத் திழிக்கும் பிறவியும் வேண்டும் எனும் உயர்வுடையதாகும் . ` மருவாகி நின்னடியே மறவேன் அம்மான் மறித்து ஒரு காற் பிறப்பு உண்டேல் , மறவாவண்ணம் திருவாரூர் மணவாளா திருத்தெங்கூராய் செம் பொனேகம்பனே திகைத்திட்டேனே `. ` மேலும் இப்பூமிசை இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே ` ` வாய்த்தது நம் தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடுமின் ` ` திருநாவுக்கரசர் தங்கு பிறப்பே வீட்டினுக்கு மேலாம் பெருமை சாதித்தார் ` ( தி .12 பெரிய புராணம் அப்பர் 312) ` மண்ணில் இருவினைக்குடலாய் வான் நிரயத் துயர்க்குடலாய் எண்ணிலுடல் ஒழிய முயல் அருந்தவத்தால் எழிற்றில்லைப் புண்ணிய மன்றினில் ஆடும்போது செய்யா நடம் காண நண்ணும் உடல் இது அன்றோ நமக்குடலாய் நயந்த உடல் ` ` மறந்தாலும் இனி இங்கு வாரோம் என்று அகல்பவர் போல் , சிறந்தார நடம் ஆடும் திருவாளன் திருவடிகண்டு இறந்தார்கள் பிறவாத இதில் என்ன பயன் ? வந்து பிறந்தாலும் இறவாத பேரின்பம் பெறலாம் ஆல் `. ` ஓதல் உறு மருந்தில்லை யொழியவொரு மருந்தில்லை `. ( கோயிற் புராணம் ) ` எவ்வுடல் எடுத்தேன் மேல்நாள் எண்ணிலாப் பிறவி தோறும் அவ்வுடல் எல்லாம் பாவம் அறம் பொருட்டாகும் அன்றோ தெவ்வுடல் பொடித்தாய் உன்றன் சேவடிக்கு அடிமை பூண்ட இவ்வுடல் ஒன்றே அன்றோ எனக்கு உடலானது ஐயா !` ( திருவிளையாடல் விடையிலச்சினை . 16). ` ஆலவாயுடையார் புகழ் பாடப்பெறுவேமேல் வேண்டுவதிம் மனித யாக்கை ( ? . திருவால வாயானபடலம் . 1) ` விரைவிடை யிவரும் நினைப்பிறவாமை வேண்டுநர் வேண்டுக மதுரம் பெருகுறு தமிழ்ச்சொல் மலர் நினக்கு அணியும் பிறவியே வேண்டுவன் தமியேன் ` ( சோணசைலமாலை ). ` இந்த மாநிலத்தே ` ( தி .4 ப .106 பா . 2 - 3.).

அப்பர் பெருமான் பொற்கழல் போற்றி! போற்றி !!


Tuesday, 12 May 2020

சிறந்த தண்டனை மன்னிப்பாகும்

பான்கெய் என்ற ஒரு புகழ் பெற்ற ஜென் துறவி ஜப்பான் தேசத்தில் வாழ்ந்து வந்தார். அவரின் தவசக்தியாலும், மக்களுக்கான அவரின் ஞான அறியுரைகளாலும் அவர் நாடு முழுக்க புகழ் பெற்றிருந்தார். இக்காரணத்தினால் அந்நாட்டின் அரசன் முதல் ஆண்டி வரை எல்லோரின் பிள்ளைகளும் சில காலம் அவரிடம் ஆன்மிக கல்விக் கற்க ஆர்வம் கொண்டிருந்தனர்.

 அப்படி பலதரப்பட்ட மாணவர்கள் தன் ஆசிரமத்தில் தங்கி கல்வி பயிலும் போது, ஒரு நாள், ஒரு மாணவன் ஒரு பொருளை திருடும் செயலில் ஈடுபட்டு மாட்டிக்கொண்டான். அப்படி சிக்கிய அம்மாணவனை மற்ற மாணவர்கள் அனைவரும் குரு பான்கெய் முன் கொண்டு வந்து நிறுத்தினர்.அம்மாணவனின் குற்றத்தை எடுத்துரைத்து, ஆசிரமத்திலிருந்து அவனை வெளியேற்றுமாறு அனைவரும் கூறினர். பான்கெய் எதுவும் பேசாமலிருந்தார். சிறிது நேரத்தில் மாணவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 

சிறிது காலம் கழித்து அதே மாணவன், மீண்டும் அதே வகையான செயலை செய்து பிடிபட்டான். மீண்டும் அனைத்து மாணவர்களும் அவனை பான்கெய் முன்கொண்டு நிறுத்த, அவரும் வழக்கம் போல அமைதியாக இருந்தார். இத்தகைய செயல் பலமுறை தொடர்ந்தது. இறுதியாக பொறுமை இழந்த மற்ற மாணவர்கள், பான்கெய் முன் சென்று தொடர்ந்து திருட்டுச் செயலில் ஈடுபடும் அம்மாணவனை இம்மடத்திலிருந்து வெளியேற்றாவிட்டால், தாங்கள் அனைவரும் வெளியேறுவதாக கூறினார்கள். மாணவர்கள் இவ்வாறு கூறியதைக் கேட்ட பான்கெய் “உங்கள் விருப்பப்படியே நீங்கள் அனைவரும் இம்மடத்திலிருந்து வெளியேறலாம்” என்று கூறினார். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவர்களிடம் பான்கெய் மேலும் தொடர்ந்து “மாணவர்களே, நீங்கள் அனைவரும் அறிவாளிகள், உங்கள் அனைவருக்கும் சரியானது எது தவறானது எது என்ற வேறுபாடு தெரிகிறது. ஆனால் தவறிழைத்த அம்மாணவனுக்கோ இவற்றைப் பற்றி எதுவும் தெரியவில்லை”. #மகரயாழ்  “நானும் அவனை இங்கிருந்து அனுப்பிவிட்டால் வேறு யார் அவனுக்கு நல்லவற்றைக் கற்றுக் கொடுப்பார்கள்”?

“ஆகையால் நீங்கள் அனைவரும் இங்கிருந்து சென்றாலும் பரவாயில்லை, அம்மாணவன் மட்டும் இங்கிருக்கட்டும்” என்று பான்கெய் கூறினார். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அத்தவறிழைத்த மாணவன், கண்ணீர் விட்டழுது பான்கெய்யிடம் மன்னிப்பு கேட்டான்.

அறியாமையால் தொடர்ந்து தவறிழைப்பவர்களுக்கு நாம் தரும் சிறந்த தண்டனை மன்னிப்பாகும்.