Wednesday, 14 July 2021

தவம்

 

அனைத்துயிர் ஒன்றென்றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சனை, பொய், களவு சூது
சினத்தையும் தவிப்பாயாகில்
செய்தவம் வேறுண்டோ?
   ----- வள்ளலார்

அறிவிலே தெளிவு

 

அறிவிலே தெளிவு நெஞ்சிலே உறுதி
அகத்திலே அன்பினோர் வெள்ளம்
பொறிகளின் மீது தனி அரசாணை
பொழுதெல்லாம் நினது பேரருளின் 
நெறியிலே நாட்டம் கருமயோகத்தில் 
நிலைத்திடல் என்றிவை அருளாய்
குறி குணம் ஏதும் இல்லாதாய் அனைத்தாய்க்
குலவிடு தனிப்பரம் பொருளே
  ---- மகாகவி சுப்ரமணிய பாரதியார்

அறம்

 

அறனறிந்து மூத்த அறிவுகையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்
      --திருக்குறள்
 பொருள்: 
அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் 
உள்ள அறிவுடையவரின் நட்பைக் கொள்ளும் வகை 
அறிந்து ஆராய்ந்து நட்பு கொள்ள வேண்டும்

ஆசை

 

அவா இல்லார்க்கு இல்லாகும்துன்பம் அஃதுஉண்டேல்
தவா அதுமேன் மேலும் வரும்
                          திருக்குறள் (368) 
பொருள்:
 ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் இல்லை. 
ஆசை உண்டானால் எல்லாத் துன்பங்களும் 
 முடிவில்லாமல் இடைவிடாமல் வரும்.

Tuesday, 13 July 2021

தெய்வம்

அவரவர் தமதமது அறிவறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே
  --- நம்மாழ்வார் திருவாய்மொழி
 பொருள்:
 அவரவர் தமது தமது அறிவுகளுக்குத் தோன்றிய 
வகைப்படியே அந்தந்த தெய்வ வடிவங்களை 
இறையவர் என அடிபணிவார்கள்; அவரவர் 
தெய்வங்கள் குறையுடையவரே அல்லர்; 
ஓர் இறைவரே அவரவருடைய விதிப்படியே 
அடையும் படி நின்று அருள் புரிகிறார்

 


Saturday, 3 July 2021

பூமியில் பிறந்த

 

ஏதத்தேஷ ப்ரசூதஸ்ய சகாஷாதக்ரஜன்மனா
ஸ்வம் ஸ்வம் சரித்ரம் சிக்ஷேரன் ப்ருதிவ்யாம் சர்வமானவா:

பூமியில் பிறந்த எல்லா மக்களும் இந்த நாட்டின் ரிஷிகளும், முனிகளுமான முன்னோர்களின் வரலாற்றிலிருந்து  தத்தமது பாதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும்

ஹிந்துஸ்தான்

 

ஹிமாலயம் ஸமாரப்ய யாவத் இந்து ஸரோவரம்
தம் தேவநிர்மிதம் தேஷம் ஹிந்துஸ்தானம் ப்ரசக்ஷதே

இமயம் முதல் குமரி வரை கடவுளால் உருவாக்கப்பட்ட இந்த நாடு ஹிந்துஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது.


Friday, 2 July 2021

பாவம் புண்ணியம்

 

அஷ்டாதஷ புராணானாம் ஸாரம் வ்யாஸேன கீர்த்திதம்
பரோபகார: புண்யாய பாபாய பரபீடனம்  

பதினெட்டுப் புராணங்களிலும் வியாஸர் சொல்லும் சாரம் இதுதான்; பிறர்க்கு உதவுவது புண்ணியம். பிறரைத் துன்புறுத்துதல் பாவம். 

நலிந்தோரை

 

அஷ்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவ ச நைவ ச
அஜாபுத்ரம் பலிம் ததாத் தேவோ துர்பலகாதக: 

குதிரையோ, யானையோ, புலியோ அல்ல;  அல்லவே அல்ல; ஆட்டுக்குட்டியே வேள்வியில் பலியிடப்படுகிறது; நலிந்தோரைக் கடவுளும் காப்பதில்லை.

பலம்

 

துர்பலஸ்ய பலம் ராஜா பாலானாம் ரேதனம் பலம்
பலம் மூர்க்கஸ்ய மௌனித்வம் சௌராணாம் அந்ருதம் பலம்

அரசன் நலிந்தோரின் பலம்; அழுகை குழந்தையின் பலம்; 
மௌனம் மூர்க்கனின் பலம்; பொய்யுரைப்பது கள்வனின் பலம்.

கல்வி

 

வித்யா விவாதாய தனம் மதாய ஷக்தி: பரேஷாம் பரிபீடனாய
கலஸ்ய: ஸாதோ: விபரீதம் ஏதத் க்ஞானாய தானாய ச ரக்ஷணாய   

துர்மதி படைத்தவனின் கல்வி விவாதங்களுக்கும், செல்வம் அகந்தைக்கும், சக்தி பிறரைத் துன்புறுத்தவுமே பயன்படுகிறது. நன்மதி படைத்தவனுக்கோ அவன் கல்வி நல்வழிப்படுத்தவும், செல்வம் கொடைக்கும், சக்தி நலிந்தவரைக் காக்கவும் பயன்படுகிறது.

சக்தி அற்றோருக்கு நட்பில்லை

 

வனானி தஹாதோ வன்ஹே ஸகா பவதி மாருத:
ஸ ஏவ தீப நாஷாய க்ருஷே கஸ்யாஸ்த்தி சஹ்ருதம்

வனத்தில் தீப்பற்றினால் பரவ உதவும் காற்று அகலின் சுடரை அவிக்கிறது. சக்தி அற்றோருக்கு நட்பில்லை.

சிங்கத்திற்குப் பட்டாபிஷேகம்

 

ந அபிஷேகோ ந சம்ஸ்கார: ஸிம்ஹஸ்ய க்ரியதே வனே
விக்ரமார்ஜிதஸ்த்வஸ்ய ஸ்வயமேவ ம்ருகேந்ரதா

வன ராஜ்யத்தில் சிங்கத்திற்குப் பட்டாபிஷேகம் நடப்பதில்லை; தன் சுய பராக்கிரமத்தாலேயே அது ராஜாவாகிறது.

நீர், அன்னம், சுபாஷிதம்.

 

ப்ருத்வீவ்யாம் த்ரீணி ரத்னானி ஜலம் அன்னம் சுபாஷிதம்.
மூடை: பாஷாணகண்டேஷு ரத்னசங்யா பர்தீயதே  

பூமியின் மூன்று  ரத்தினங்கள் நீர், அன்னம், சுபாஷிதம். முட்டாள்களோ கற்களை ரத்தினம் என்பார்கள்.

நெருப்பு, கடன், பகை

 

அக்னி: சேஷம் க்ருணா: சேஷம் ஷத்ரு: சேஷம் ததைவ ச
புன: புன: ப்ரவர்த்தேத தஸ்மாத் சேஷம் ந கார்யேத்

நெருப்பு, கடன், பகை இம்மூன்றும் சிறிது எஞ்சினாலும் மீண்டும் வளரும். ஆகவே முற்றிலுமாய்த் தீர்க்கப்பட வேண்டும்.