Saturday, 25 July 2020

தீரன் சின்னமலை

ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய போர் வீரர் (1756 - 1805)

கொங்குநாடு என்பது தற்போதைய ஈரோடு, கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களை சார்ந்த ஒரு சில பகுதிகளை உள்ளடக்கியது ஆகும். இந்த கொங்கு மண்டலத்தைச் சார்ந்த பெயர் அறியாத பல வீரர்களும் மிகவும் உக்கிரமாக  ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு இருக்கிறார்கள். 1802 ஆம் ஆண்டிலிருந்து 1804 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆங்கிலேயர்களுக்கு எதிரான இரண்டாம் பொலிகார் சண்டையில் கொங்கு மண்டலத்தில் இருந்து சிறந்த வீரர்கள் போரிட்டு இருக்கிறார்கள். ஈரோட்டுக்கு அருகில் உள்ள காங்கேயம் என்னும் ஊரில், தீர்த்தகிரி என்கிற வீரர் 1756 ஆம் ஆண்டு இரத்தினசாமி மந்திரியார் என்பவருக்கு மகனாகப்  பிறந்தார். இவர் அங்கே தலைவராக விளங்கியது மட்டுமல்லாமல் சிறந்த நிர்வாகியாகவும், முதல்தரமான குதிரைப்படை வீரராகவும் விளங்கினார். இவர் சமுதாயத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து அவர்களுக்கும் தனது போர்ப் படையில் இடம் தரும் அளவிற்கு பரந்த மனப்பான்மை கொண்ட தலைவராக விளங்கினார். தீர்த்தகிரி மாபெரும் வீரராக விளங்கிய காலத்தில் ஆங்கிலேயருக்கு முன்பாகவே கொங்கு மண்டலத்தை மைசூர் படையில் இருந்தும், முதலாவதாக ஹைதர் அலி, பின்பு அவருடைய மகன் திப்புசுல்தான் ஆகியோரிடம் இருந்தும் அவர் காப்பாற்றி வந்தார். ஹைதர் அலியும், திப்பு சுல்தானும் கொங்கு மண்டலத்திற்கு அருகில் உள்ள பல பிரதேசங்களை கைப்பற்றிய போதும், தீர்த்தகிரி கொஞ்சம் கூட அசைந்து கொடுக்கவில்லை.

           கொங்கு மண்டலத்திற்கு அருகில் உள்ள பிரதேசங்களில் இருந்து வரிவசூல் செய்து கொண்டு திப்பு சுல்தானுடைய  திவான் படைவீரர்களுடன் செல்வதை கேள்விப்பட்ட தீர்த்தகிரி, அவர்களை வழியிலேயே தடுத்து நிறுத்தினான். கொங்கு மண்டலத்தை ஆட்சி செய்ய மைசூரிலிருந்து சுல்தானுடைய அதிகாரத்திற்கு இங்கு எந்த விதமான தேவையும் ஏற்படவில்லை என்று தைரியமாக அவர்களை அடித்து விரட்டினான் தீர்த்தகிரி. இவ்வாறு அவர்கள் வரிவசூல் செய்து வந்த பணத்தை பறிமுதல் செய்து கொண்டு, அவர்களை விரட்டி அடிக்கும் போது தீர்த்தகிரி இவ்வாறு சொன்னார்," போய் உங்கள் சுல்தானிடம் சொல்லுங்கள், சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவில் ஒரு "சின்ன மலை" வரிப் பணத்தை எல்லாம் பிடுங்கிக் கொண்டது". இவ்விதமாகத் தான் தீர்த்தகிரி, தீரன் சின்னமலை என்ற அழியாப் பெயரை பெற்றார்.

            காலம் மாறியது; மைசூரை ஆண்ட திப்பு சுல்தானுக்கு ஆங்கிலேயர் மூலமாக நெருக்கடி ஏற்பட்டது. ஜெனரல் ஹாரிஸ் என்பவன் மைசூரை நோக்கி பெரும்படையோடு தாக்குதல் தொடுத்தான். அப்பொழுது அந்தத்  தாக்குதலை சமாளிக்க திப்பு சுல்தான் தீரன் சின்னமலையினுடைய உதவியை நாடினான். ஏற்கனவே திப்பு சுல்தான் மீது பகை இருந்தும்கூட ஆங்கிலேயன் என்கிற வெளிநாட்டு சக்தியை தோற்கடிப்பதற்காக தீரன் சின்னமலை, தனது பத்தாயிரம் வீரர்களோடு  மைசூர் விரைந்தார். அந்தப் போரில் திப்புசுல்தான் படைகளோடு சேர்ந்து கொண்டு ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டார். இருந்தபோதும் ஆங்கிலேயர் திப்பு சுல்தானை வீழ்த்தி அவனைக்  கொன்று விட்டனர். இதன்பிறகு தீரன் சின்னமலை தனது படைவீரர்களுடன் கொங்கு நாடு திரும்பினார். துரதிருஷ்டவசமாக தீரன் சின்னமலையின் படையைச் சேர்ந்த வேலப்பன் என்கிற ஒரு நம்பிக்கைக்குரிய படைவீரன் பிரிட்டிஷ் அதிகாரிகளின் கையில் சிக்கினன். அவர்களுடைய சித்திரவதை தாங்காமல் அவர்களுக்கு உடந்தையாக மாறுவதாக அவன் வாக்களித்தான்.

          திப்பு சுல்தானுடைய வீழ்ச்சிக்குப் பிறகு ஆங்கிலேயர்களின் கவனம் கொங்கு நாட்டின் மீது திரும்பியது. ஆங்கிலேய அதிகாரிகள் தீரன் சின்னமலையை சரணடைந்து விடுமாறு செய்தி சொல்லி அனுப்பினார்கள். ஆனால், தீரன் சின்னமலை வீரத்துடன் அவர்களுடைய சமாதான உடன்படிக்கையை நிராகரித்து விட்டார். வரிவசூல் செய்வதிலும் ஒரு குறிப்பிட்ட ஆங்கிலேயப் படையணியை காவிரி நதியின் ஓரத்தில் வைத்து பாதுகாத்திடவும் வேண்டும் என்கிற நிபந்தனைகளை தீரன் சின்னமலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேயப் படைகள் கர்னல் மெகிஸ்கான்  தலைமையிலே காவேரி ஆற்றின் கரையோரமாக, தீரன் சின்னமலையின் படைகளோடு மோதுவதற்கு தயாராகி வந்தது. இதனை முன்பே எதிர்பார்த்த தீரன் சின்னமலை தனது படைவீரர்களை மிக முக்கியமான பகுதிகளில் நிலைநிறுத்தி ஆங்கிலேயப் படையை எதிர்பார்த்து நின்றான். தீரன் சின்னமலை காவிரி ஆற்றில் எந்தெந்த பகுதிகளில் சுழல் உள்ளதோ, ஆழமான பகுதிகள் உள்ளதோ அவை அனைத்தும் அறிந்து வைத்திருந்தான். ஆகவே ஆற்றில் சுழல் உள்ள பகுதிகளுக்கு முன்பாக தனது படை வீரர்களை நிலைகொள்ளச் செய்வதன் மூலம் ஆங்கிலேயப் படை அணியை தூண்டி தன் பக்கமாக அவன் இழுத்தான். விஷயம் தெரியாத ஆங்கிலேய குதிரை படையானது காவிரி ஆற்றில் சுழல் உள்ள இடங்களில் எல்லாம் இறங்கி, அவர்கள் சுழலில் சிக்கி ஆற்றோடு இழுத்துச் செல்லப்பட்டார்கள். ஆங்கிலேயப்படை சின்னாபின்னம் அடைந்து நாலா திசையிலும் சிதறியது. படை நடத்தி வந்த மெகிஸ்தான் தீரன் சின்னமலையால் பிடிக்கப்பட்டு உடனடியாக அவன் சிரச்சேதம் செய்யப்பட்டான். இவ்விதமாக தீரன் சின்னமலை ஆங்கிலேயப் படையின் தாக்குதலை வெற்றிகரமாக முறியடித்தார்.

      ஆங்கிலேயப் படைகள் தோல்வியுற்றதைக் கேள்விப்பட்ட ஜெனரல் ஹாரிஸ் மிகவும் கோபமடைந்து தானே படை நடத்தத் தீர்மானித்தான். கொங்கு மண்டலத்தில் ஒரு கோவில் திருவிழா நடைபெறும் சமயத்தில் திடீரென தாக்குதல் நடத்தி தீரன் சின்னமலையைப்  பிடிக்க வேண்டும் என்று அவன் திட்டமிட்டான். ஆனால் இதை முன்பே தெரிந்து கொண்ட  தீரன் சின்னமலை சாமர்த்தியமாக கோயில் திருவிழாவில் இருந்து தப்பி விட்டார். தீரன் சின்னமலையை பிடிக்க முடியாமல் போனதால் கடும் கோபமுற்ற  ஜெனரல் ஹாரிஸ் கோயிலை சேதப்படுத்திவிட்டு ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் கோட்டையை நோக்கி விரைந்தான்.

        ஆனால் கோட்டை காலியாக இருந்தது. யாரும் அங்கே காணப்படவில்லை. கோட்டையை சுற்றி வரும் பொழுது திடீரென்று எங்கிருந்தோ ஜெனரல் ஹாரிஸ்ஸை நோக்கி ஒரு குதிரை வேகமாக வந்தது. அதன் மீது அமர்ந்து மின்னல் வேகத்தில் வந்த தீரன் சின்னமலை ஜெனரல் ஹாரிஸ்ஸை  நோக்கி ஒரு வெடிகுண்டை வீசினான். அது ஜெனரலுக்கு மிக அருகாமையில் வெடித்தது. நடந்த குழப்பத்தில் தீரன் சின்னமலை தப்பித்து விட்டார். ஹாரிஸ் தன் படைகளோடு பின்வாங்கினான்.

        இரண்டாம் முறையாக ஜெனரல் ஹாரிஸ்  பெரும் படையோடு ,பீரங்கிகள் கொண்டு ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலையின் கோட்டை மீது வெறித் தாக்குதல் நடத்தினான். ஒற்றர்கள் மூலம் இதை ஏற்கனவே தெரிந்துகொண்ட  தீரன் சின்னமலை தப்பித்து விட்டார். கோட்டையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்த ஜெனரல் ஹாரிஸ்சுக்கு மிகுந்த ஏமாற்றமாக ஆனது. கோட்டை காலியாக இருந்தது. மிகுந்த வெறுப்புற்ற ஜெனரல் அங்கிருந்த ஒரு காலணியை எடுத்து மிக வேகமாக அங்குள்ள சுவரின் மீது எறிகிறான். அந்தக் காலணி உடைந்து அதனுள் ஒரு சிறிய சீட்டு ஹாரிஸின் கையில் கிடைக்கிறது .அதில் ஏற்கனவே ஆங்கிலேயப் படைகள் அங்கே வருவதற்கான துப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜெனரல் ஹாரிஸ் தனது படையில் உள்ள துரோகி யார் என்பதை அறிந்து கொள்வதற்கு தீவிர விசாரணை செய்ய முடிவு செய்கிறான்.

    அந்தக் காலணியைச் செய்த தொழிலாளியை விசாரித்ததில் ஏற்கனவே மைசூரில் ஆங்கிலேயப் படையினரால் பிடிக்கப்பட்ட தீரன் சின்னமலையின் நம்பிக்கைக்குரிய வேலப்பன் என்கிற வீரன்தான் அடிக்கடி தகவல்களை அனுப்பி வருவதை ஜெனரல் ஹாரிஸ் கண்டுபிடித்து விடுகிறான். இதனால் கோபமடைந்த ஜெனரல் உடனடியாக அவனை வரவழைத்து துப்பாக்கியால் சுட்டு அவனைத் தீர்த்துக் கட்டுகிறான். சமையற்காரன்  நல்லான் என்பவனைப் பயன்படுத்தி தீரன் சின்னமலையை பிடிக்க ஹாரிஸ் திட்டமிடுகிறான். காட்டினுள் மறைந்து வாழும் தீரன் சின்னமலை கொரில்லா போர் முறையில் அடிக்கடி திடீர் தாக்குதல் நடத்தி ஆங்கிலேயப் படையை திக்குமுக்காடச் செய்து வந்தார். இந்த நேரத்திலே ஆங்கிலேயப் படையின் மிரட்டலுக்கு அடிபணிந்து சமையற்காரன் நல்லான் ஜெனரல் ஹாரிஸ்சுக்கு உதவ உடன் பட்டான். அவனுடைய ஏற்பாட்டின்படி காட்டில் மறைந்து வாழும் தீரன் சின்னமலைக்கு உணவு சமைத்து தருவதற்காக நல்லான் காட்டினுள் அனுப்பப்பட்டான். சரியான உணவு இன்றி திரிந்து வரும் தீரன்சின்னமலையை பிடித்திட இது ஒரு நல்ல வாய்ப்பாக மாறியது. ஒரு குடிசையில் நல்லான் தங்கி இருந்தான். தீரன் சின்னமலை நல்லான் குடிசைக்குள் பிரவேசித்து உணவு ஏற்றுக்கொள்ளத் தயாரானார். உணவு உண்ணும் நேரத்தில் ஆயுதங்கள் தேவை இல்லையே என்று நல்லான் கூறிட அவன் பேச்சை நம்பிய தீரன் சின்னமலை தனது ஆயுதங்களை குடிசைக்கு வெளியிலேயே வைத்துவிட்டு நிராயுதபாணியாக உணவினை சாப்பிடத் தொடங்கினார். சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்த நல்லான்  பின் வாசல் கதவை திறந்து விட்டான். வெளியிலேயே காத்து இருந்த ஆங்கிலேய படைகள் நயவஞ்சகமாக  பின் வாசல் வழியாக உள்ளே நுழைந்து உணவு உண்டு கொண்டிருந்த தீரன் சின்னமலையையும் அவரது சகோதரரையும் கைது செய்து விட்டார்கள்.

    பிடிபட்ட அந்த நிலையிலும் தீரன் சின்னமலை தன்னைக் காட்டிக்கொடுத்த துரோகி நல்லானின் கழுத்தை நெரித்து அங்கேயே கொன்றுவிட்டார். ஆங்கிலேயப் படையினரால் கைது செய்யப்பட்ட தீரன் சின்னமலையும், அவரது சகோதரரும் மற்றைய முக்கிய வீரர்களும் 1805 ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் நாள் சங்ககிரியில் தூக்கிலிடப்பட்டனர். இவ்விதமாக மைசூர் திப்பு சுல்தானிலிருந்து ஆங்கிலேயர்கள் வரை மிகத் தீவிரமாக போரிட்டு அவர்களை பல முறை வென்ற தீரன் சின்னமலை ஒரு துரோகியின் நயவஞ்சகத்தால் பிடிபட்டு, தன் தாய் நாட்டிற்காகத் தன் இன்னுயிரை இழந்தார். இதன்பிறகு கோபமடைந்த ஆங்கிலேயர்கள் தீரன்சின்னமலை தொடர்பான அனைத்து இடங்களையும் பொருட்களையும் அழித்து விட்டதால் அவரைக் குறித்த எந்த விதமான வரலாற்று தகவல்களும் நமக்கு கிடைக்காமல் போய்விட்டது. கிராம மக்களின் செவிவழிச் செய்திகள் மூலமாகவும், நாட்டுப்புறப் பாடல்கள் மூலமாக மட்டுமே நாம் தீரன் சின்னமலையின் வீர வரலாற்றை அறிந்துகொள்ள முடிகிறது. புலவர் குழந்தை என்னும் தமிழ் அறிஞர் தனது பாட்டனாரிடம் இருந்து செவிவழியாக பெற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டு தொகுத்த விஷயங்களைத்தான் இருபதாம் நூற்றாண்டிலே நாம் தீரன் சின்னமலையின் வரலாறாகப் பெற முடிந்திருக்கிறது.

No comments:

Post a Comment