ஆதிசங்கரர் பாரதத்தை வலம் வந்தவாறே, இமயத்தில் உள்ள பத்ரிகாசிரமத்துக்கு வந்து சேர்ந்தார். அங்குள்ள ஸ்ரீ பத்ரி நாராயணர் ஆலயத்தில் விக்ரஹம் இல்லை. இது கண்ட சங்கரர் திடுக்குற்றார். அங்குள்ளவர்களிடம் விசாரித்தார். விக்கிரஹத்தை சீன கொள்ளையர்களுக்குப் பயந்து, நாரத குண்டம் என்ற குளத்தில் ஒளித்து வைத்திருப்பதாக மக்கள் கூறினார்கள்.
ஸ்ரீ ஆதிசங்கரர் மிகவும் வேதனைப்பட்டார். மக்கள் தினமும் போற்றி வழிபடும் ஸ்ரீ பத்ரி நாராயணருக்கு இந்தக் கதியா வரவேண்டும், என்று மனம் உருகிக் கண்ணீர் வடித்தார். எந்த வகையிலும் ஸ்ரீ பத்ரிநாதரை மக்கள் தரிசிக்க ஆவன செய்ய வேண்டும் என்று உறுதி பூண்டார்.
உடனே குளத்தில் இருந்து விக்கிரஹத்தை மீட்க ஆயத்தமானார். ஆனால் மக்கள் சம்மதிக்கவில்லை. ஸ்ரீ ஆதிசங்கரரை நோக்கிய மக்கள் “மிக ஆழமான குளம். இதனுள் குதித்து விக்கிரஹத்தை எடுப்பது என்பது பெரிய நீச்சல் வீரராலும் இயலாத காரியம். அதனால் தாங்கள் இம்முயற்சியில் இறங்க வேண்டாம்!” என்று தடுத்தனர்.
ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் குளத்தில் குதித்தார் ஸ்ரீ ஆதிசங்கரர். முதல் முறை நீருக்குள் குதித்து மூழ்கி மேலெழுந்த போது வெறுங்கையுடன் காணப்பட்டார். இரண்டாம் முறையும் அப்படியே. விக்கிரஹம் அவரது கைக்குக் கிட்டவில்லை. மூன்றாம் முறை பிராணாயாமம் செய்து மூச்சடக்கி நீருள் மூழ்கி அங்குமிங்கும் தேடினார். விக்கிரஹத்தைக் கண்டுபிடித்து மேலே கொண்டு வந்து கரை சேர்த்து விட்டார்.
விக்ரஹத்திற்கு சேதம் ஏற்பட்டிருந்தது. எனவே அதற்கு சாஸ்திர முறைப்படி பரிகாரம் செய்து ஸ்ரீ பத்ரிநாராயணரை ஆலயத்துக்குக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீ ஆதிசங்கரர். மகான் ஸ்ரீ ஆதிசங்கரரின் தீரச் செயலைக் கண்டு மக்கள் வியந்தனர்; புகழ்ந்தனர்; பாராட்டினர்!
No comments:
Post a Comment