Thursday, 31 October 2019

ஜோன்ஸ் சால்க்

"மொத்தமும் தேவையில்லை.
அதில் இரண்டே இரண்டு சொட்டுக்கள் போதும்..."

--என்று அவர் கூறியதை உலகம் அதிசயம் கலந்த ஆச்சரியத்துடன் பார்த்தது.

அது எப்படி இரண்டே இரண்டு சொட்டுகள் போதும் என்கிறார் அவர்?

-- என மருத்துவ உலகம் கேள்விகளோடு தயாராக இருந்தது.

அவர் தரப்போகும் அந்த இரண்டு சொட்டுக்களுக்காக ஒட்டு மொத்த உலகமே காத்திருந்தது.

ஏப்ரல் 12, 1955.

ஒட்டு மொத்த உலகமே இந்த நாளுக்காகத் தான் காத்திருந்தது.
ஒரு மருத்துவர் தனது இரண்டு சொட்டுக்கள் குறித்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடப் போகின்றார்.
அவரது அந்த ஆராய்ச்சி முடிவுகளுக்காகத் தான் ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்தது.

மிச்சிகன் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் தலைமை மருத்துவரான டாக்டர்.தாமஸ் பிரான்சிஸ் மேடையில் ஏறி மைக்கின் முன் வந்து நிற்கிறார்.

அவர் பேசப்போகும் வார்த்தைகளை எதிர் நோக்கி ஒட்டு மொத்த உலகமே எதிர்பார்ப்பில் அப்படியே உறைந்து நிற்கிறது,

"நீண்ட காலமாக மனித குலம்-நடத்தி  வந்த யுத்தம் இதோ இன்றோடு முடிவுக்கு வருகிறது.
ஆராய்ச்சி முடிவுகள் மிகச் சாதகாமான விளைவுகளைத் தந்துள்ளன.
இந்த வேக்சின் அருமையான முடிவுகளைத் தந்துள்ளது.
பலதரப்பட்ட சோதனைகளைச் செய்து பார்த்து விட்டோம்.
அனைத்து சோதனைகளிலும் சாதகமான பலன்களே வந்துள்ளது.
இந்த வேக்சின் முழுப் பாதுகாப்பானது.

இந்த வேக்சின் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படுகிறது.

இதை கண்டுபிடித்த நம் பல்கலைக்கழகத்தின் "அந்த மருத்துவர்" தனக்கு எந்தக் காப்புரிமையும் வேண்டாமென மறுத்து விட்டார். எனவே இன்றில் இருந்து இந்த மருந்து முழுக்க முழுக்க இலவசமாகத் தரப்படுகிறது"

என்று பரபரப்பாக அறிவிக்கிறார்.

அவர் அறிவித்து முடித்து மேடையை விட்டு இறங்கிய அடுத்த நொடி,
பெருத்த ஆரவாரம் எழுந்தது.

மக்கள் ஒருவரையொருவர் ஆரத் தழுவிக் கொண்டு கண்ணீர் விடுகின்றனர்.

தொழிற்சாலைகளின் இயந்திரங்கள் கூட ஓரிரு நிமிடங்கள் நிறுத்தப்பட்டு--
மௌன மரியாதை தரப்படுகிறது.

எதற்காக?

"அந்த ஒரு மனிதருக்காக.."

பத்திரிக்கைகளும், புகைப்படக்காரர்களும் அந்த மனிதரை அந்த மருத்துவரை மொய்த்துக் கொண்டு, பல கேள்விகளைக் கேட்டார்கள். அனைத்திலும் பிரதானமாக அமைந்த கேள்வி...

"நீங்கள் ஏன் இந்த வேக்சினுக்கு காப்புரிமையைப் பெறவில்லை,
பெற்றிருந்தால் ட்ரில்லியன்களில் பணம் வந்திருக்குமே?"
என்பது தான்.

இப்படிபட்ட ஒரு மாமருந்தை கண்டுபிடித்துவிட்டு, அதை காப்புரிமை செய்யாமல் இலவசமாகத் தந்துள்ளாரே. இதை மட்டும் இவர் காப்புரிமை செய்து இருந்தால் இந்த மனித இனம் உள்ள மட்டும் இவருக்கு பணம் கொட்டிக் கொண்டிருக்குமே... இவர் ஏன் அப்படி செய்யவில்லை.... என்பதை அவர்களால் நம்பவே முடியவில்லை.

எனவே ஒருமித்த குரலில் அந்த ஒரே ஒரு கேள்வியை மட்டுமே எல்லோரும் கேட்டனர்.

அமைதியான  சிறு புன்னகையுடன் அவர்களைப் பார்த்த அந்த மருத்துவர்,

"காப்புரிமையா?
இதற்கா?
எனக்கா?
உலகத்திற்கு ஆற்றலைத் தரும் சூரியன் அதற்காக காப்புரிமையைப் பெற்றுள்ளதா?"

என்று மட்டும் சொல்லிவிட்டு தனது அடுத்த பணிக்கு சென்றுவிட்டார்.

விக்கித்து திகைத்து அதிசயித்து நின்றது உலகம்.

அதுமட்டுமல்ல, அக்காலக் கட்டத்தில் வைரஸ் கிருமியால் பரவும் நோய்களுக்கு லைவ் வைரஸ்களைக் கொண்டு அதாவது உயிருடன் இருக்கும் வைரஸ்களைக் கொண்டு தான் வேக்சின்களைத் தயாரிப்பார்கள்.

அதாவது உயிருள்ள ஆனால் பலவீனமாக்கப்பட்ட வைரஸை உடலில் செலுத்தி உடலின் நோயெதிர்ப்பு சக்தி அந்த வைரசிற்கு எதிராக போராடும் வல்லமையை, ஆண்டிபாடிகள் வடிவில் உடலைப் பெற வைப்பார்கள்.

எனவே பிற்காலத்தில் நிஜமான வைரஸ் தாக்குதல் வந்தால்,
இவனைத் தான் நாம ஏற்கனவே அடிச்சுருக்கோமே என்று உடலின் இயற்கையான நோய் எதிர்ப்புத் திறன் அந்த நோயை விரட்டி விடும்.

ஆனால், அந்த மருத்துவர் பயன்படுத்தியது இறந்த வைரஸ்களை. வைரஸ்களை ஆய்வகத்தில் வளர வைத்துபின் அதில் பார்மால்டிஹைடு வேதிபொருளை செலுத்த, அந்த வைரஸ்கள் முற்றிலும் செயலிழந்து போகும். பின் அந்த செயலழிந்த வைரஸ்களை உடலின் செலுத்தினால்-- உடல் வழக்கம் போல ஆண்டிபாடிகளை உருவாக்கும். இதையும் அவர் காப்புரிமை செய்யவில்லை.

இப்படி மருத்துவ உலகின் மாபெரும் புரட்சிகளை செய்து விட்டு, அதை இலவசமாக மனித குலத்திற்கு அர்ப்பணித்துவிட்டு அமைதியாகத் தன் அடுத்த பணியைப் பார்க்க சென்ற,

அவர்தான் மருத்துவர்  "ஜோன்ஸ் சால்க்."

அவரால் இரண்டே இரண்டு சொட்டில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்ட அந்த நோய்--"போலியோ"...

No comments:

Post a Comment